பாலசந்திரன் சுள்ளிக்காடு: விஷ்ணுபுரம் விழா 2013 சிறப்பு விருந்தினர்

விஷ்ணுபுரம் விருதுவிழாவில் இம்முறை மலையாளக்கவிஞர் பாலசந்திரன் சுள்ளிக்காடு கலந்துகொள்கிறார்.

வரலாற்றில் அபூர்வமாக மிக இளம் வயதிலேயே சில கவிஞர்கள் ஒரு பண்பாட்டை நோக்கி பேச ஆரம்பிக்கிறார்கள். அப்பண்பாட்டின் முந்தையதலைமுறைகளிடம் பாரம்பரியத்திடம் இளையதலைமுறைக்கு என்னென்ன சொல்வதற்கிருக்கிறதோ அனைத்தையும் அவர்கள் வழியாக வெளிப்படுத்துகிறது காலம். அவ்வாறு விதியால் தேர்வுசெய்யப்பட்ட கவிஞன் ஒருவகையில் ஆசீர்வதிக்கப்பட்டவன், அவனுக்கு மரணமில்லை. இன்னொரு வகையில் சபிக்கப்பட்டவன், தன் காலகட்டத்தின் அனைத்து வலிகளையும் அவன் அனுபவிக்கிறான்.

உலக இலக்கியத்தில் அவ்வாறு இளமையின் அனலை குரலில் ஏந்தி வந்த பெரும்கவிஞர்கள் பலர் உண்டு. ஷெல்லியும் மயகோவ்ஸ்கியும் அவர்களில் உலகைநோக்கிப் பேசியவர்கள். இன்றும் குன்றாத இளமை ஒளியுடன் உலகக் கவிதையை ஆள்பவர்கள். மலையாளத்தில் அந்த வரிசையில் வைக்கத்தக்க பெரும் கவிஞர் பாலசந்திரன் சுள்ளிக்காடு.

1957 ஆம் ஆண்டு பரவூரில் பிறந்தார். எர்ணாகுளம் மகாராஜாஸ் கல்லூரியில் ஆங்கில இலக்கியம் பயிலும் போது ஜனநாயக வாலிபர் சங்கத்தில் ஈடுபட்டார். அங்கிருந்து நக்சலைட் இயக்கத்திற்குச் சென்றார். எழுபதுகளின் கொந்தளிப்பான அரசியலின் முகமாக அமைந்தன பாலசந்திரன் சுள்ளிக்காட்டின் கவிதைகள். கேரளமெங்கும் கல்லூரிகளில் அவரது கவிதைகள் பெரும் அலையை உருவாக்கின

நக்சலைட் இயக்கம் கொடூரமான முறையில் அரசால் ஒடுக்கப்பட்டதும் பாலசந்திரன் சுள்ளிக்காடு பலவகையான உளவியல் வதைகளுக்காளானார். ஜி.அரவிந்தன் இயக்கத்தில் பாலசந்திரன் சுள்ளிக்காடே நடித்து வெளிவந்த அவரது வாழ்க்கைக்கதையான போக்குவெயில் அந்த வதைகளின் வழியாகச் செல்லும் அபூர்வமான திரைப்படம்.

பாலசந்திரன் சுள்ளிக்காடு எழுதிய கவிதைகள் சந்தமும் ஆவேசமான ஒலியமைவும் கொண்டவை. பெரும்பாலும் மலையாளத்தில் வேரூன்றிய படிமங்கள் கொண்டவை. மேடைகளில் கவிதைகளை ஆவேசமாகச் சொல்லக்கூடியவர். அவரது சுயசரிதையான சிதம்பர நினைவுகள் தமிழில் கே.வி ஷைலஜா மொழியாக்கத்தில் வெளிவந்திருக்கிறது

இணைப்புகள்

பாலசந்திரன் சுள்ளிக்காடு ஒரு சித்திரம்– பிரிவின் விஷம் ஜெயமோகன்


பாலசந்திரன் சுள்ளிக்காட்டின் சிதம்பர நினைவுகள் ஹரன் பிரசன்னா


பாலசந்திரன் சுள்ளிக்காட்டின் ஒரு கட்டுரை

மீள்பதிவு: http://www.jeyamohan.in/?p=42665

Leave a comment